கோத்தா கினபாலு, நவம்பர்.04-
பிலிப்பைன்ஸ் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள டினோ புயலின் காரணமாக, நேற்று திங்கட்கிழமை இரவு கோத்தா கினபாலு சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டன.
கோலாலம்பூரை நோக்கிச் செல்லும் பல விமானங்கள் குறிப்பிடத்தக்க அளவில் தாமதமானதுடன், சில விமானங்கள் பல மணி நேரம் புறப்படாமல் இருந்தன. இதனால் பயணிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாயினர்.
இந்நிலையில், சண்டாகான் மற்றும் தாவாவ் போன்ற, சபா மாநிலத்திற்குள் இயங்கும் விமானச் சேவைகள் பாதிக்கப்படவில்லை என்று கோத்தா கினபாலுவிலுள்ள மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் தெரிவித்துள்ளது.
டினோ புயல் நேரடியாக சபா வான்வழி பாதையைத் தாக்கவில்லை என்றாலும் கூட, அண்டை நாடுகளில் ஏற்பட்டுள்ள வானிலை மாற்றம் மற்றும் விமானப் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக அட்டவணைகள் தாமதமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.








