கங்கார், பிப்ரவரி.06-
ஆமை இனங்களைத் கடத்தும் செயலில் ஈடுபட்ட 'நிஞ்சா டர்சில்’ கும்பலைச் சேர்ந்த மூன்று பேர், கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களிடமிருந்து 2 லட்சம் ரிங்கிட்டிற்கும் அதிகமான தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்நடவடிக்கையானது, வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசிய பூங்காக்கள் துறையான Perhilitan-னும், புக்கிட் அம்மானைச் சேர்ந்த வனவிலங்குகள் கடத்தல் குற்றங்களைத் தடுக்கும் சிறப்புப் பிரிவும் ஒன்றிணைந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், இந்த நடவடிக்கையில், பெர்லிஸ் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையும் இணைந்து, அம்மாநிலத்தில், 3 இடங்களில் நடத்திய அதிரடிச் சோதனைகளில் 50 அரிய வகை ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கடந்த புதன்கிழமை, கங்காரிலு உள்ள ஒரு வீட்டில் பிற்பகல் 12.35 மணியளவில், உள்ளூர்வாசி ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும், அவரிடமிருந்து Sulcata ஆமைகள் என சந்தேகிக்கப்படும் ஆறு அரிய வகை ஆமைகள் கைப்பற்றப்பட்டதாகவும் Perhilitan தலைமை இயக்குநர் டத்தோ அப்துல் காடீர் ஹாஷிம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, காக்கி புக்கிட் பகுதியில் உள்ள இரண்டு வீடுகளிலிருந்து பல்வேறு அரிய வகை ஆமைகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
இதன் மொத்த மதிப்பானது 2 லட்சத்து 87 ஆயிரத்து 395 ரிங்கிட் என்றும் அப்துல் காடீர் குறிப்பிட்டுள்ளார்.








