மலேசியாவின் தற்போதைய ஆர்.ஓ.என்95 பெட்ரோலுக்கான புடி95 எரிபொருள் மானியம் திட்டத்தை, அனைத்து மலேசியர்களும் பயன்படும் வகையில் தொடர்ந்து செயல்படுத்துவதோடு, வங்கிகள் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு நேரடியாக அதிக ஆதரவு வழங்க வேண்டும் என்றும் ஜசெக கட்சியின் பாகன் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங் வலியுறுத்தியுள்ளார்.
எரிபொருள் மானியங்களிலிருந்து T20 வருமான பிரிவினரை விலக்குவதற்குப் பதிலாக, வங்கித் துறையை இலக்காகக் கொள்வதன் மூலம், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் "இரட்டை நிலைப்பாடு கொண்டவர் என்ற குற்றச்சாட்டுகளைத் தவிர்க்க முடியும்" என்றும் Lim குறிப்பிட்டுள்ளார்.
குறைந்த வருமானம் கொண்ட பிரிவினருக்கு வழங்கப்படும் புடி95 மானியத்தை, தேவையுடையவர்களுக்கு மட்டுமே வழங்கும் வகையில் அதனைக் கட்டுப்படுத்துவது குறித்த அன்வரின் பரிசீலனைக்கு, லிம் மேற்கண்ட பரிந்துரையை வெளியிட்டுள்ளார்.
மேலும், மானிய திட்டத்தைக் கட்டுப்படுத்தும் முடிவானது, “குறுகிய பார்வையுடையதாகவும், பொதுமக்களின் நம்பிக்கையை குறைக்கும் வகையிலும் அமையலாம்” என்றும் லிம் எச்சரித்துள்ளார்.
அதேவேளையில், நிதி சீர்திருத்தங்களை நியாயமான கொள்கையாகக் காண்பிக்காமல், தண்டனை போன்றதாக மக்கள் உணர்ந்தால் அது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த கொள்கையானது, நகர்ப்புறங்களில் வாழும் அதிக வருமான பெறும் T20 பிரிவினரின் நிதி அழுத்தங்களை மிக எளிமையாக மதிப்பிடுகிறது என்றும், மாதம் 11,820 ரிங்கிட்டுக்கு மேல் சம்பாதிக்கும் குடும்பங்கள் அனைத்தும், நிதி ரீதியாக வசதியாக இருக்கின்றனர் என்று கருதுவது தவறு என்றும் லிம் குறிப்பிட்டுள்ளார்.
வாழ்க்கைச் செலவுகளின் உயர்வு, வீட்டு கடன் மற்றும் குழந்தை பராமரிப்பு செலவுகள் போன்ற காரணங்களால் பல T20 குடும்பங்களும் நிதி அழுத்தத்தில் இருப்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் காரணமாகவே, புடி95 எரிபொருள் மானியத் திட்டம் தொடர்ந்து பராமரிக்கப்பட வேண்டும் என்றும், அது அனைத்து மலேசியர்களுக்கும் கிடைக்கக்கூடியதாக இருக்க வேண்டும் என்றும் லிம் வலியுறுத்தியுள்ளார்.








