கோலாலம்பூர், ஜூலை 15-
கடந்த 2009-ஆம் ஆண்டு, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM காவலில் இருந்தபோது, இறந்துபோன அரசியல் உதவியாளர் தியோ பெங் ஹாக் மரணம் தொடர்பில் நீதிக்கேட்டு, மனித உரிமைப் போராட்டவாதிகள் இன்று காலையில் நாடாளுமன்ற கட்டடத்தை நோக்கி அணிவகுத்து சென்றனர்.
எனினும் நாடாளுமன்றக் கட்டடத்தின் வேலியிலிருந்து 100 மீட்டருக்கு முன்னதாகவே அந்த மனித உரிமைப் போராட்டவாதிகளை போலீசாரும், ரேலா படையினரும் மனித சங்கியிலியின் மூலம் தடுத்து நிறுத்தினர்.
15 ஆண்டுகளுக்கு முன்பு மர்மமான முறையில் இறந்து கிடந்த தியோ பெங் ஹாக் மரணம் தொடர்பில் நீதிக் கேட்டு, அவர்கள் மகஜர் ஒன்றை சமர்ப்பிக்க முற்பட்டனர்.
எனினும் மகஜர் சமர்ப்பிப்பதாக இருந்தாலும் நாடாளுமன்ற நிர்வாகத்தின் முன்அனுமதி பெற வேண்டும் என்று அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
SPRM- மின் முக்கிய சாட்சியான தியோ பெங் ஹாக் , அந்த ஆணையத்தின் கட்டடத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கடந்த 2011 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட அரச விசாரணை ஆணையத்தின் விசாரணையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.








