ஷா ஆலாம், பிப்ரவரி.08-
உலு சிலாங்கூர், புக்கிட் பெருந்தோங் வணிகப் பகுதியில் சட்டத்திற்குப் புறம்பாகச் செயல்பட்டு வந்த ஐந்து பிட்காயின் வளாகங்களை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இப்பகுதிகளில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதாகப் பொதுமக்கள் அளித்த புகாரைத் தொடர்ந்து, உலு சிலாங்கூர் நகராட்சி மன்றமும் தெனாகா நேஷனலும் இணைந்து இந்தச் சோதனையை நடத்தின.
சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள், அந்த ஐந்து வணிக வளாகங்களும் முறையான உரிமம் இன்றி, கட்டுப்பாடற்ற முறையில் அதிகப்படியான மின்சாரத்தைப் பயன்படுத்தி வந்ததை உறுதிப்படுத்தினர். இத்தகைய சட்டத்திற்குப் புறம்பான செயல்பாடுகள் மின்சாரக் கட்டமைப்பைப் பாதிப்பதோடு மட்டுமல்லாமல், மின் கசிவு, தீ விபத்து போன்ற ஆபத்துகளை ஏற்படுத்தி பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைகின்றன. உரிய அனுமதியின்றி பெரிய அளவில் மின்சாரத்தைப் பயன்படுத்துவது சட்டப்படி குற்றமாகும் என்பதால், விதிமீறலில் ஈடுபட்ட அந்த வளாகங்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.








