மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், தனது அதிகாரப்பூர்வ பிறந்தநாளை முன்னிட்டு அரச குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நான்கு முக்கிய அதிகாரிகளுக்கு ஜோகூர் மாநில விருதுகளை வழங்கி, கெளரவித்துள்ளார்.
ஜோகூர் அரசப் பிரதிநிதி துங்கு இஸ்மாயிலின் துணைவியார் செ புவான் மஹ்கோதா கலீதா, 'டத்தோ ஸ்ரீ முலியா சுல்தான் இப்ராஹிம் ஜோகூர்' என்ற அந்தஸ்தை தாங்கிய SMIJ விருதைப் பெற்றார். துங்கு இஸ்மாயிலின் சகோதரர் துங்கு அப்துல் ரஹ்மானுக்கு நீண்டகால சேவைக்கான பதக்கம் வழங்கப்பட்டது.
ஜோகூர் சட்ட ஆலோசகர் டத்தோ அப்துல் அஜிஸ் எங்கான் , சிறப்புப் பிரிவு இயக்குனர் டத்தோ இப்ராஹிம் தாருஸ், புக்கிட் அமான் CID இயக்குனர் டத்தோ எம். குமார் மற்றும் ஜோகூர் போலீஸ் தலைவர் டத்தோ அப் ரஹமான் அர்ஷாட் ஆகிய நால்வருக்கும் 'டத்தோ' பட்டத்தை தாங்கிய DMIJ விருது வழங்கப்பட்டது.
ஜோகூர் ராணுவப் படையைச் சேர்ந்த இரு அதிகாரிகளுக்கு SIJ விருதும், மேலும் சுமார் 370-க்கும் மேற்பட்டோருக்குப் பல்வேறு பிரிவுகளில் சேவைப் பதக்கங்களும் வழங்கப்பட்டுள்ளன.
இந்த விருது வழங்கும் விழா ஜோகூர் இஸ்தானா பெசாரில் துங்கு இஸ்மாயில் தலைமையில் நடைபெற்றது.








