ஜார்ஜ்டவுன், மே.11-
இளைஞர்களின் மேம்பாட்டை வலுப்படுத்தும் முயற்சியாக, இந்த ஆண்டு மாநிலம் முழுவதும் உள்ள 41 இளைஞர் அமைப்புகளுக்கு 77 ஆயிரத்து 300 ரிங்கிட் இளைஞர் மேம்பாட்டு நிதியை அங்கீகரித்துள்ளது பினாங்கு மாநில அரசு. இந்த நிதியின் மூலம், இளைஞர் அமைப்புகள் உள்ளடக்கிய, முற்போக்கான, சமூகத்திற்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் திட்டங்களை செயல்படுத்த முடியும் என்று அம்மாநில இளைஞர், விளையாட்டு, சுகாதார ஆட்சிக் குழு உறுப்பினர் டேனியல் கூய் ஸி சென் தெரிவித்தார்.
இளைஞர்கள் வெறும் வழக்கமான இலக்கிடப்பட்டத் தரப்பினர் மட்டுமல்ல, மாநிலத்தின் இலக்குகளை அடைவதில் மிக முக்கியமானப் பங்காளிகள் என்றும் அவர் கூறினார். இளைஞர் மேம்பாடு மனித மூலதன மேம்பாட்டிற்கான நீண்டகால முதலீடு என்பதால், நிதி பெறும் ஒவ்வோர் அமைப்பும் அதை கவனமாகவும், வெளிப்படையாகவும், பயனுள்ள வகையிலும் பயன்படுத்த வேண்டும் என்று டேனியல் வலியுறுத்தினார்.








