சுபாங் ஜெயாவில் உள்ள பொழுதுபோக்கு பூங்கா ஒன்றில் ரோலர் கோஸ்டர் சவாரியின்போது ஏற்பட்ட விபத்தில் 10 பேர் காயமடைந்தனர்.
கடந்த சனிக்கிழமை இரவு சுமார் 9 மணியளவில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தின்போது, 11 முதல் 44 வயதுக்குட்பட்ட மலேசியர்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் என மொத்தம் 22 பேர் ரோலர் கோஸ்டரில் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் அனைவரும் சுபாங் ஜெயாவில் உள்ள மருத்துவ நிலையங்களுக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர். உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.
இந்தச் சம்பவம் தொடர்பாக மறுநாள் காலை 11.45 மணியளவில் போலீசாருக்கு தகவல் கிடைத்ததாக சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் வான் அஸ்லான் வான் மாமாட் தெரிவித்தார்.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதால், பொதுமக்கள் ஊகங்களைப் பரப்ப வேண்டாம் என்றும் வான் அஸ்லான் கேட்டுக்கொண்டார்.








