பினாங்கு, நவ.22-
பினாங்கு மேல்முறையீட்டு வாரியத்தின் தலைவராக பிரபல வழக்கறிஞர் டத்தோ கே. குமரேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேல்முறையீட்டுத் தலைவராக டத்தோ பால்டேவ் சிங் நியமிக்கப்பட்டது பெரும் சர்ச்சையாக்கப்பட்டதைத் தொடர்ந்து மலேசிய சட்டத்துறையில் கிரிமினல் மற்றும் சிவில் துறையில் தனித்துவமான திறனைப்பெற்ற முன்னணி வழக்கறிஞரான டத்தோ குமரேந்திரன் அப்பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
மேல்முறையீட்டு வாரியத் தலைவராக பினாங்கு சட்டமன்றத்தினால் நியமிக்கப்பட்ட டத்தோ பால்டேவ் சிங் , தற்போது மாநில இரண்டாவது துணை முதலமைச்சராக பதவி வகித்து வரும் ஜக்தீப் சிங் டியோவின் மாமனார் என்பதால், இவ்விவகாரம் சில தரப்பினரால் சர்ச்சையாக்கப்பட்டதைத் தொடர்ந்து அப்பதவிக்கு மூத்த வழக்கறிஞர் டத்தோ குமரேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆறு பேர் கொண்ட மேல்முறையீட்டு வாரியத்தை டத்தோ குமரேந்திரன் வழிநடத்துவார். சட்டத்துறையில் டத்தோ குமரேந்திரன் கொண்டுள்ள பரந்த அனுபவம் மற்றும் தகுதியை அடிப்படையாக கொண்டு அப்பொறுப்புக்கு அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜக்தீப் சிங் தெரிவித்தார்.
வழக்கறிஞர் மன்றத்தின் முன்னாள் தலைவர் ஃபாரீட் கபூர், அந்த வாரியத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வழக்கறிஞர் கே. சைமன் முரளி, பினாங்கு வழக்கறிஞர் மன்றத் தலைவர் கேரலின் ஓ, நாகரெத்தினம் ரெங்கசாமிப்பிள்ளை மற்றும் ரெஜினா அமலோர்பவ மேரி அபூர்வசாமி ஆகியோர் அந்த வாரியத்தின் இதர உறப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக ஜக்தீப் சிங் விளக்கினார்.








