தனக்கு தொடர்பு இல்லாத மற்றும் நம்பத்தகாத ஒரு மோசமான வழக்கு தனக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ளதாக முன்னாள் மனித வள அமைச்சரும், மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் தெரிவித்தார்.
கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தனக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள மூன்று லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில், நீதிமன்ற விசாரணைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் டத்தோஸ்ரீ சரவணன் மேற்கண்டவாறு கூறினார்.
தனக்கு தொடர்பு இல்லாத மனிதர்களுடன் தொடர்புப்படுத்தப்பட்டு, இந்த வழக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கிற்காக தாம் சிறிதும் அவமானப்படவில்லை என்றும், தாம் நிரபராதி என்பதை நிரூபிப்பிப்பதற்கு மற்ற வழக்குகளைப் போல் அல்லாமல் வழக்கு ஓரிரு மாதங்களில் முடிப்பது நல்லது. அதற்கு முழமையாக ஒத்துழைக்கத் தாம் தயாராக இருப்பதாக டத்தோஸ்ரீ சரவணன் குறிப்பிட்டார்.
அரசியல் ரீதியாக தம்மை வீழ்த்த நினைத்தால், தம்மை விட மிகச்சிறந்த வேட்பாளரை தாப்பாவிற்கு அனுப்பலாம். அதைவிடுத்து அரசியல் ரீதியாக காழ்ப்புணர்ச்சியை காட்ட வேண்டாம் என்று சம்பந்தப்பட்ட தரப்பினரை டத்தோஸ்ரீ சரவணன் கேட்டுக்கொண்டார்.
இவ்வழக்கு விசாரணையை செவிமடுப்பதற்காக டத்தோஸ்ரீ சரவணனின் ஆதரவாளர்கள் பெரும் திரளாக ஜாலான் டூத்தா நீதிமன்றத்தில் குழுமியிருந்தனர்.








