கோலாலம்பூர், பிப்ரவரி.19-
கோலாலம்பூர், ஜிஞ்ஜாங் பகுதியில் உள்ள பல்வேறு வங்கி ஏடிஎம் இயந்திரங்களின் திரைகளை உடைத்துச் சேதப்படுத்தியதாக நம்பப்படும் 65 வயது முதியவர் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
செந்தூல் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி பஸ்ரி சகோனி கூறுகையில், "சந்தேகத்திற்குரிய அந்த நபர் நேற்று புதன்கிழமை பிற்பகல் 3.21 மணியளவில் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ஒரு மோட்டார் சைக்கிள், தலைக்கவசம், உடைகள் மற்றும் குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் ஒரு கல் ஆகியவற்றைப் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்" என்றார்.
"ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்க முடியாமல் போனதால் ஏற்பட்ட அதிருப்தியில், அந்த நபர் கல்லை எறிந்து திரைகளை உடைத்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது" என்று ஏசிபி பஸ்ரி குறிப்பிட்டார்.
இந்தக் கைது நடவடிக்கையின் மூலம், முன்னதாகப் புகாரளிக்கப்பட்ட 5 ஏடிஎம் சேத வழக்குகள் தீர்க்கப்பட்டுள்ளதாகக் போலீஸ் துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பான விசாரணை அறிக்கைகள் தயார் செய்யப்பட்டு, விரைவில் துணை பப்ளிக் பிராசிகியூட்டரிடம் ஒப்படைக்கப்படும் என பஸ்ரி கூறினார்.








