மலேசியத் தொலைக்காட்சி ஊடகத்துறையின் புகழ்பெற்ற சுற்றுச்சூழல் செய்தியாளரான 67 வயதுடைய டத்தோ கரம் சிங் வாலியா மறைவு, நாட்டின் ஊடகத்துறைக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமது ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
1995-ஆம் ஆண்டு TV3 தொலைக்காட்சியில் தனது பணியைத் தொடங்கிய கரம் சிங், சுற்றுச்சூழல் விழிப்புணர்வை மக்களிடையே கொண்டு சேர்த்ததில் ஒரு முன்னோடியாகத் திகழ்ந்தார். இதற்காக அவர் புகழ்பெற்ற 'ஸ்ரீ அங்காசா' விருது மற்றும் நான்கு முறை சிறந்த சுற்றுச்சூழல் செய்தியாளர் விருதினையும் வென்றுள்ளார். செய்தி அறிக்கைகளின் இறுதியில் அவர் கூறும் பழமொழிகளால் மலேசிய நேயர்களின் மனதில் அவர் நீங்காத இடம் பிடித்தவர் என்று அகமட் ஜாஹிட் வர்ணித்தார்.
"அவரது குரலும், தனித்துவமான செய்தி வழங்கும் திறனும் மக்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும்" என தொடர்புத்துறை துணை அமைச்சர் தியோ நீ சிங் புகழாஞ்சலி சூட்டியுள்ளார். உடல்நலக் குறைவால் 2014-இல் ஓய்வு பெற்ற இவருக்கு, கடந்த ஜூன் மாதம் HAWANA நிதியுதவி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.








