கோலாலம்பூர், ஜனவரி.13-
கோலாலம்பூர், ஜாலான் செந்தூல் மார்கெட் அருகே இன்று காலை நடந்த சாலை விபத்தில் 69 வயது மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார்.
காலை சுமார் 9:30 மணியளவில், செந்தூல் மார்கெட் அருகே மூதாட்டி சாலையைக் கடக்க முயன்ற போது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர் மீது மோதியது.
இதில் பலத்த தலைக்காயமடைந்த அந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மருத்துவக் குழுவினர் உறுதிப்படுத்தினர் என்று கோலாலம்பூர் போக்குவரத்து போலீஸ் தலைவர் ஏசிபி முஹமட் ஸம்ஸூரி முஹமட் இசா தெரிவித்தார்.
விபத்தை ஏற்படுத்திய வாகனம் அந்த இடத்திலிருந்து தப்பிச் சென்றதால், இது வாகனமோட்டி தப்பியோடிய விபத்தாகக் கருதப்படுகிறது. செந்தூல் மாவட்ட போலீஸ் துறை தற்போது அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருவதுடன், விபத்தைக் கண்ணுற்ற சாட்சிகள் யாராவது இருந்தால் முன்வந்து தகவல் தருமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வழக்கு 1987 ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து சட்டம் 41 ஆவது பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.








