நாட்டின் தலை சிறந்த வர்த்தகராக, தொழில் அதிபராக திகழ்ந்த வீ.கே.கே. என்று அன்பாக அழைக்கப்பட்ட பெரியவர் வீ.கே. கல்யாணசுந்தரத்தின் சுய சரிதையை விவரிக்கும் திரைப்படத்தைப் போன்ற ஆவணப் படம் ஒன்று வரும் நவம்பர் 25 ஆம் தேதி சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு ஈப்போ, கிந்தா, லோட்டஸ் எல்எஸ்ஃப் ஶ்ரீ கிந்தா திரையரங்கில் திரையிடப்படவிருக்கிறது.
வீ.கே.கே. அறவாரியத்தின் ஏற்பாட்டில் திரையிடப்படவிருக்கும் பெரியவர் வீ.கே. கல்யாண சுந்தரத்தின் சுய சரிதை ஆவணப்படம், பொது மக்களுக்கு எவ்வித கட்டணமின்றி இலவசமாக திரையிடப்படவிருக்கிறது என்று ஏற்பாட்டுக்குழு சார்பில் கலா பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்விற்கு பேரா மாநில அரசு ஆட்சிக் குழு உறுப்பினர் அ. சிவநேசன், ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம். குலசேகரன் ஆகிய இருவரும் சிறப்பு வருகை புரிவர் என்று அவர் குறிப்பிட்டார்.
பெரியவர் வீ.கே. கல்யாணசுந்தரம், தமிழ்நாடு, திருவாரூர் மண்ணில் பிறந்து தமது சிறு வயதில் மலாயாவில் கால்பதித்து, தஞ்சோங் மாலிமில் ஒரு சமையல்காரராக குறைந்த சம்பளத்தில் வேலைக்கு அமர்ந்து, தொழில்நுணுக்கங்களை கற்று, அதில் தேர்ச்சி பெற்று, தொழிலை அபிவிருத்தி செய்து மலேசியாவில் ஒரு முன்னுதாரண தொழில் அதிபராக விளங்கியவராாவர்.
கருணை உள்ளம் நிறைந்த பெரியவர் வீ. கே. கல்யாண சுந்தரம், உழைப்பால் உயர்ந்த ஓர் இமயமாவார். அவரின் வாழ்க்கை வரலாற்றைக் கொண்ட இந்த ஆவண திரைப்படம், இளையோர்களுக்கு பெரும் உந்தும் சக்தியாக இருக்கும் என்று பந்தாய் மெடிக்கல் செண்டரில் மகப்பேறு நிபுணரும் வி.கே.கே அறவாரியத்தின் உறுப்பினருமான டாக்டர் ஜெயபாலன் தெரிவித்தார்.
பெரியவர் வீ.கே. கல்யாண சுந்தரம் அதிகமான உதவிகளை வழங்கிய ஓர் வள்ளலாவார் என்று புகழாரம் சூட்டினார் ஈப்போ, அரசினர் தமிழ்ப்பள்ளியின் முன்னாள் ஆசிரியரும் , முன்னணி எழுத்தாளருமான கமலாட்சி ஆறுமுகம்.
வாழ்க்கையில் வர்த்தக துறையில் மேம்பாடுகாண பல தடைகளை கடந்து, பல இன்னல்களை தாண்டி வர்த்தக துறையில் மேம்பாடு கண்ட பெரியவர் வீ.கே. கல்யாண சுந்தரத்தின் வரலாற்றை அனைவரும் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்ற அவசியத்தை உணர்ந்தும் வகையில் ஒரு மணி நேரம் கொண்ட இந்த குறும் படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக்குழு உறுப்பினர் கலா பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.
வர்த்தக துறையில் ஈடுபட்டு வரும், வளரந்து வரும் வணிகர்கள் மட்டும் அல்ல, மாணவர்களும் கற்க வேண்டிய பல விஷயங்கள் இந்த குறும் படத்தில் நிறைய உண்டு. இப்படத்தின் இலவச காட்சியை காண அனைவரும் திரண்டு வரும்படி கலா பாலசுப்பிரமணியம் கேட்டுக்கொண்டார்.








