புத்ராஜெயா, பிப்ரவரி.26-
'டோண்டோ' (Tonto) எனப்படும் இடைத்தரகர் கும்பலுடன் தொடர்பில் இருக்கும் அல்லது அமலாக்கத் தகவல்களைக் கசியவிடும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் டத்தோ ஸாகாரியா ஷாபான் எச்சரித்துள்ளார்.
'ஒப்ஸ் மிடில்மேன்' சோதனையில் லஞ்சம் பெறும் அதிகாரிகள் சிக்கியதைத் தொடர்ந்து, இத்தகைய ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை பாயும் என அவர் வலியுறுத்தியுள்ளார்
அண்மையில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் நடத்திய சோதனையில், சில அமலாக்க அதிகாரிகள் 'டோன்டோ' கும்பலிடமிருந்து மாதம் 1,600 முதல் 2,500 ரிங்கிட் வரை லஞ்சம் பெற்றுக் கொண்டு, சோதனைகள் குறித்த தகவல்களை முன்கூட்டியே பரிமாறியது கண்டறியப்பட்டுள்ளது.
இது குறித்துப் பேசிய டத்தோ ஸாகாரியா, இத்தகைய துரோகச் செயல்களால் திட்டமிடப்பட்ட பல சோதனைகள் தோல்வியடைவதாகவும், குற்றவாளிகள் தப்பிச் செல்ல இது வழிவகுப்பதாகவும் வருத்தம் தெரிவித்தார். தவறு செய்யும் அதிகாரிகள் அடையாளம் காணப்பட்டால், அவர்கள் மீது எந்தத் தயக்கமும் இன்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதிபடக் கூறினார்.
மேலும், முறையான ஓட்டுநர் உரிமம் இன்றி வெளிநாட்டினர் லாரிகளை இயக்குவது குறித்து எழுந்துள்ள புகார்களைத் தொடர்ந்து, சாலைப் போக்குவரத்துத் துறையான ஜேபிஜேவுடன் இணைந்து நாடு தழுவிய ரீதியில் சோதனைகள் தீவிரப்படுத்தப்படும். குறிப்பாகக் கட்டுமானப் பணிகளில் ஈடுபடும் கனரக வாகனங்கள் தீவிரக் கண்காணிப்புக்கு உள்ளாக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.








