மலேசியா–புருணை இடையிலான 27ஆவது வருடாந்திர தலைவர்கள் ஆலோசனைச் சந்திப்பில் பங்கேற்பதற்காக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இரண்டு நாள் அதிகாரப்பூர்வ அலுவல் பயணமாக புருணை சென்றடைந்தார் .
பிரதமர் அன்வார் மற்றும் அவரது துணைவியார் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில் பயணித்த சிறப்பு விமானம், மாலை 6.10 மணியளவில் புருணை அனைத்துலக விமான நிலையத்தைச் சென்றடைந்தது.
அவர்களை புருணை வெளியுறவு அமைச்சர் இளவரசர் அப்துல் மதீன் போல்கியா வரவேற்றார்.
நாளை பிரதமர் அன்வார், புருணை மன்னர் சுல்தான் ஹசனல் போல்கியா-வை, நூருல் இமான் அரண்மனையில் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
அச்சந்திப்பின் போது, பேரிடர் மேலாண்மை ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்திடப்படவுள்ளது
மலேசியா–புருணை இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதுடன், பிராந்திய மற்றும் அனைத்துலக விவகாரங்கள் குறித்தும் இரு தலைவர்களும் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளவுள்ளனர்.








