குவாந்தான்–சிரம்பான் சாலையின் 149.9ஆவது கிலோமீட்டரில் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில், ஆசிரியையும் அவரது ஆறு வயது மகனும் உயிரிழந்தனர்.
நேற்றிரவு சுமார் 9.30 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில், 46 வயதான கார்ட்டினி ஙதேனன் மற்றும் அவரது மகன் முஹம்மது அகீஃப் முகமது அஸ்மி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக ரொம்பின் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் ஷரிப் ஷாய் ஷரிப் மொண்டோய் தெரிவித்தார்.
குடும்பத்தினர் பயணித்த எம்.பி.வி வாகனம், சாலையில் கிடந்த மரக்கட்டையில் மோதியதால் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் வலதுபுற பள்ளத்தில் கவிழ்ந்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
வாகனத்தை ஓட்டிச் சென்ற 47 வயது கணவர் தலையில் பலத்த காயமடைந்த நிலையில், முவாட்சாம் ஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
1987ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டம், பிரிவு 41(1)-ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.








