கிளந்தான், குவா மூசாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நெங்கிரி சட்டமன்றத் தொகுதியில் இடைத் தேர்தலுக்கு வகை செய்யப்பட்டதைப் போல பெர்சத்து கட்சியின் 6 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் இடைத் தேர்தல் நடைபெறுவதற்கு மக்களவை சபா நாயகர் வழிவிட வேண்டும் என்று அக்கட்சி, இன்று கடிதம் அனுப்பியுள்ளது.
முசாங் குகை, புக்கிட் கந்தாங், தஞ்சங் கராங், ஜெலி, குவாலா கங்சார் மற்றும் லாபுவான் ஆகிய 6 தொகுதிகளில் இடைத் தேர்தல் நடத்தப்படுவதற்கு வழிவிடும் வகையில் அத்தொகுதிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிலை குறித்து சபா நாயகர் ஜோஹாரி அப்துல் முடிவு செய்ய வேண்டும் என்று அந்த கடிதத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு பகிரங்கமாக தங்கள் ஆதரவை நல்கியதற்காக அந்த 6 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பெர்சத்து கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
ஒரு கட்சியை பிரதிநிதித்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட ஒருவர், கட்சி விட்டு கட்சி மாறினாலோ அல்லது சொந்த கட்சியிலிருந்து நீக்கப்பட்டாலோ அவர், இயல்பாகவே நாடாளுன்ற உறுப்பினர் தகுதியை இழக்கிறார் என்று கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்தின் 49 A விதி கூறுகிறது என்று பெர்சத்து கட்சியின் உதவித் தலைவர் Ronald Kiandee தெரிவித்துள்ளார்.
எனவே மேற்கண்ட சட்டத்தை பயன்படுத்தி சம்பந்தப்பட்ட 6 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் தொகுதியை அடுத்த 21 நாட்களுக்குள் காலி செய்தாக வேண்டும். அந்த 6 தொகுதிகளிலும் இடைத் தேர்தல் நடைபெறுவதற்கு வழிவிடப்பட வேண்டும்.
இதற்கு மக்களவை சபா நாயர் Johari Abdul ஓர் ஆணைப் பிறப்பிக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக Ronald Kiandee குறிப்பிட்டுள்ளார்.








