தைப்பிங், டிச. 26-
தைப்பிங் மருத்துவமனையின் கவனக்குறைவினால் மூளைப்பகுதியில் நிரந்தர காயத்திற்கு ஆளாகிய ஒரு முன்னாள் பாதுகாவலருக்கு 18 லட்சம் ரிங்கிட்டை இழப்பீடாக வழங்கும்படி தைப்பிங் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
முன்னாள் பாதுகாவலரான 28 வயது பி. தினகரனுக்கு ஏற்பட்ட மூளைப்பாதிப்புக்கு மலேசிய அரசாங்கம், தைப்பிங் மருத்துவமனையின் இயக்குநர் மற்றும் மேலும் மூன்று மருத்துவர்களுமே தார்மீக பொறுப்பேற்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதி நூர் ருவேனா முகமட் நூர்டின் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
தமக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு பிரதிவாதிகள் ஐவருமே காரணமாகும் என்று நிரூபிப்பதில் தினகரன் வெற்றி பெற்றுள்ளார் என்று நீதிபதி தமது தீர்ப்பில் சுட்டிக்காட்டினார்.
இதன் தொடர்பில் அந்த முன்னாள் பாதுகாவலருக்கு பொது இழப்பீட்டுத் தொகையாக 3 லட்சத்த 50 ஆயிரம் ரிங்கிட், சிறப்பு இழப்பீட்டுத் தொகையாக ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 979 ரிங்கிட் 04 காசு, மூன்றாவது இழப்பீட்டுத் தொகையாக 59 ஆயிரத்து 979 ரிங்கிட், ஜீவாதாரத்தை இழந்ததற்காக ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 600 ரிங்கிட், கூடுதல் இழப்பீட்டுத் தொகையாக மூன்று லட்சம் ரிங்கிட், வழக்கு செலவுத் தொகையாக ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் என மொத்தம் 18 லட்சம் ரிங்கிட்டை இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட வேண்டும் என்று 5 பிரதிவாதிகளுக்கும் நீதிபதி உத்தரவிட்டார்.
வாதியின் மூளையில் 12 மணி நேரத்திற்கும் மேலாக இருக்க வேண்டிய பிராணவாயு, கிடைக்காமல் போனதால், அவர் மூளையில் நிரந்தர காயத்துடன், தனது எஞ்சிய காலத்தை கழிக்க வேண்டிய துர்ப்பாக்கியத்திற்கு ஆளாகி இருப்பதாக நீதிமன்ற அகப்பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட தீர்ப்பில் நீதிபதி நூர் ருவேனா குறிப்பிட்டார்.
தினகரனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், முறையான வழிமுறைகளை கையாண்டு இருப்பார்களேயானால் இத்தகைய நிரந்தர காயம் ஏற்படுவதை தவிர்த்து இருக்க முடியும் என்று தனது 69 பக்கத் தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி பிற்பகல் 1.05 மணியளவில் ஜுரு, தாமான் மங்காவில் உள்ள தனது வீட்டிற்கு மோட்டர் சைக்கிளில் திரம்பிக்கொண்டு இருந்த தினகரன், பாரிட் புந்தார் பகுதியில் விபத்தில் சிக்கி கடும் பாதிப்புக்கு ஆளானதாக வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.








