மலாயா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நாடகப் போட்டியில் இடம்பெற்ற காட்சி ஒன்று சமூக ஊடகங்களில் விமர்சனத்தை ஏற்படுத்தியதையடுத்து, அப்பல்கலைக்கழகம் மன்னிப்பு கோரியுள்ளது.
போட்டியின் விதிமுறைகளின்படி, ஒவ்வொரு நிகழ்ச்சியும், எதிர்மறை அம்சங்களோ, தூண்டுதல் அல்லது மத, ஒழுக்கம், நெறிமுறை மற்றும் பண்பாட்டு மதிப்புகளை பாதிக்கும் உள்ளடக்கங்களோ இருக்கக் கூடாது என முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் பல்கலைக்கழகம் விளக்கமளித்துள்ளது.
என்றாலும், சர்ச்சைக்குரிய அக்காட்சியானது முன்கூட்டியே பரிசீலிக்கப்பட்ட திரைக்கதையில் இடம்பெறாமல் இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், போட்டி விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகப் பல்கலைக்கழகம் விளக்கம் அளித்துள்ளது.
இந்நிலையில், சர்ச்சைக்குரிய அந்த நாடகம் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சமூக ஊடகங்களில் பரவிய அந்த நாடகக் காட்சியில், தம்பதியர் படுக்கையில் நெருக்கமாக இருப்பது போலான காட்சிகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.








