கோலாலம்பூர், அக்டோபர்.10-
மாதம் 2 ஆயிரத்து 700 ரிங்கிட்டுக்கும் குறைவாக வருமானத்தைப் பெறுகின்ற ஏழை குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இலவச உயர்க்கல்வி வழங்கப்படவிருக்கிறது. அவர்களுக்கான செலவினத்தை உயர்க்கல்விக்கான தேசிய நிதியகமான பிடிபிடிஎன் ஏற்கிறது என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
அதே வேளையில் உயர்கல்விக்கூடங்களில் பட்டப்படிப்பில் முதல் நிலையில் சிறப்புத் தேர்ச்சி பெறும் குறைந்த வருமானம் பெறுகின்ற மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான பிடிபிடிஎன் கடன், தள்ளுபடி செய்யப்படும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
பிடிபிடிஎன் கடன் பெற்றவர்கள், வேலை செய்யத் தொடங்கிய பின்னர் கடனைத் திருப்பிச் செலுத்தும் சக்தியைக் கொண்டிருந்த போதிலும் அதனைச் செலுத்த தவறுவார்களேயானால், அவர்களின் அனைத்துலகப் பயணத்திற்குத் தடை விதிக்கும் கறுப்புப் பட்டியல் நடைமுறை மீண்டும் அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது.








