கோலாலம்பூர், ஜூன் 19-
கோலாலம்பூர், ஜாலான் புடு-வில் நேற்றிரவு 7 வீடுகளை உட்படுத்தி நிகழ்ந்த தீவிபத்தில், 6 வீடுகள் முற்றிலுமாக தீக்கிரையாகியன. ஒரு வீடு 40 விழுக்காடு வரையில் சேதமடைந்தது.
மேலும், 3 வாகனங்களும் 6 மோட்டார்சைக்கிளும் தீக்கிரையான வேளை, சம்பந்தப்பட்ட வீடுகளுக்கு அருகேயுள்ள இரண்டு மாடிகள் கொண்ட கடைவீட்டின் முதலாவது மாடியும் தீக்கிரையாகியது.
நேற்று இரவு மணி 8.04 அளவில் தகவலைப் பெற்றதை அடுத்து, கோலாலம்பூர்-லுள்ள 4 தீயணைப்பு மீட்பு நிலையங்களிலிருந்தும் டேசா பெட்டாலிங் தன்னார்வ தீயணைப்பு படையிலிருந்தும் சுமார் 25 வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததோடு, தீயை அணைக்கும் நடவடிக்கைகளில் ஈடபட்டனர்.
அதிகாலை மணி 1.43க்கு தீ முற்றிலுமாக அணைக்கப்பட்ட வேளை, உயிருடற்சேதம் ஏற்படவில்லை.
தீ ஏற்பட்டதற்கான காரணமும் மொத்த இழப்பும் குறித்து விசாரிக்கப்படுவதாக தீயணைப்பு மீட்பு துறை தெரிவித்தது.








