குவாந்தான், பிப்ரவரி.17-
குவாந்தானில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர், இன்று காலை வீடு ஒன்றில் இறந்து கிடந்த சம்பவம், கொலை – தற்கொலையாக இருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
அக்குடும்பத்தைச் சேர்ந்த 32 வயதான ஆடவர், தனது 28 வயதான மனைவி, 55 வயதான தாயார், 3 மற்றும் 4 வயதுடைய இரு குழந்தைகள் ஆகியோரை கூர்மையான ஆயுதத்தால் தாக்கிக் கொலை செய்து விட்டு, தானும் தற்கொலை செய்திருக்கலாம் என பகாங் மாநில போலீஸ் தலைவர் யஹாயா ஒத்மான் தெரிவித்துள்ளார்.
சிலாங்கூரில் பணியாற்றி வந்த அந்த ஆடவர், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தான் குவாந்தானில் பணியாற்றத் தொடங்கியதாகவும் கூறப்படுகின்றது.
அவ்வீட்டின் படுக்கையறையில், அந்த ஆடவர், அவரது மனைவி மற்றும் இரு குழந்தைகளின் சடலங்களும், சமையலறையில் அவரது தாயாரின் சடலமும் கண்டறியப்பட்டுள்ளது.
லோரோங் செராதிங் டாமாய் பகுதியில் நடந்த இச்சம்பவத்தையடுத்து, அந்த ஆடவரின் 15 வயது சகோதரர் அதனைக் கண்டறிந்து, உடனடியாக போலீசாருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இக்கொலை – தற்கொலை சம்பவத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக யஹாயா தெரிவித்துள்ளார்.








