ஜோகூர் பாரு, டிசம்பர்.18-
தெப்ராவ் தொழிற்பேட்டையிலுள்ள, கணினி உதிரிப் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில், குடிநுழைவு அதிகாரிகள் நடத்திய அதிரடிச் சோதனையில், முறையான ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாகப் பணியாற்றி வந்த 356 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 7 மணியளவில் இந்த சோதனை நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டதாக ஜோகூர் மாநில குடிநுழைவுத் துறை இயக்குநர் டத்தொ முகமட் ருஸ்டி முகமட் டாருஸ் தெரிவித்துள்ளார்.
இச்சோதனை நடத்தப்படுவதற்கு முன்பாக உளவுத்துறையின் மூலம் அங்கு சட்டவிரோதத் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், அந்த தொழிற்சாலையைச் சேர்ந்த இரு மனிதவள அதிகாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
திடீரென நடத்தப்பட்ட இச்சோதனையின் போது, பலர் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர்.
என்றாலும், தொழிற்சாலையின் அனைத்து வாயில்களிலும் அதிகாரிகள் காவலுக்கு நின்றதால், வேறு வழியின்றி அவர்கள் சரணடைந்ததாகவும் முகமட் ருஸ்டி முகமட் டாருஸ் தெரிவித்துள்ளார்.








