சிப்பாங், நவ. 18-
பயணப்பெட்டிகள் வடிவில் இருக்கும் மின்சார ஸ்கூட்டர்களை விமான நிலையத்தில் பயன்படுத்துவதற்கு பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை கடந்த நவம்பர் 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக மலேசிய வான் போக்குவரத்து இலாகாவின் நிர்வாக தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ கேப்டன் நோரஸ்மான் மாமூட் தெரிவித்துள்ளார்.
பயணப்பெட்டி வடிவில் உள்ள மின்சார ஸ்கூட்டர்கள் பயணப்பெட்டியாகவும், பயணியை ஏற்றிச்செல்வதற்கும் வசதியைக்கொண்டது என்றாலும் அத்தகைய ஸ்கூட்டர் , பாதுகாப்பு இடர்களுக்கு உரியது என்று வகைப்படுத்தப்பட்டுள்ளதாக இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் கேப்டன் நோரஸ்மான் குறிப்பிட்டார்.
விமான நிலையத்தில் மட்டுமின்றி, விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ள இடங்களிலும் விமானங்களின் பயன்பாட்டிற்கான கனரக வாகனங்கள் உள்ளன. எனவே விபத்து மற்றும் விமான நிலைய சாதனங்கள் சேதப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு தானியங்கி முறையிலான பயணப்பெட்டி வடிவிலான ஸ்கூட்டருக்கு தடை விதிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்








