ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட முறைகேடு புகார்கள் சமூக ஊடகங்களில் வைரலான பிறகுதான் கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்கிறது என்ற குற்றச்சாட்டுகளைக் கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடெக் திட்டவட்டமாக மறுத்துள்ளார். பாலியல் துன்புறுத்தல் போன்ற சம்பவங்கள் குறித்து இணையத்தில் பதிவிடாமல் நேரடியாக அதிகாரிகளிடம் மட்டுமே புகார் அளிக்க வேண்டும் என்று கூறிய அவர் புகார்கள் மீது முறையான விசாரணைகள் நடத்தப்பட்டுப் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்குச் சமூக நலத்துறை மூலம் உரிய பாதுகாப்பும் மருத்துவ உதவிகளும் வழங்கப்படுவதாகவும் ஃபத்லினா தெளிவுபடுத்தியுள்ளார்.
இதற்கிடையே, சரவாக்கில் பாலியல் புகாரில் சிக்கிய ஆசிரியர் ஒருவர் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். மேலும், பெர்லிஸில் கடந்த பிப்ரவரி மாதம், ஆறாம் ஆண்டு மாணவி தன் நாற்காலியில் அமரச் சென்றபோது சக மாணவர் நாற்காலியை இழுத்ததால் கீழே விழுந்து, கீழ் முதுகு தசைநார்களில் ஏற்பட்ட காயம் மற்றும் கடுமையான மன உளைச்சல் காரணமாக கடந்த நான்கு மாதங்களாகப் பள்ளிக்குச் செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ள அச்சிறுமியின் சம்பவம் குறித்தும் தற்போது துறை சார் விசாரணை தீவிரமாக நடந்து வருவதாக ஃபத்லினா தெரிவித்துள்ளார்.








