கோத்தா பாரு, பிப்ரவரி.02-
கிளந்தான் மாநிலம் கோத்தா பாரு, ஜாலான் கெபூன் சுல்தானில் உள்ள கிடங்கு ஒன்றில், நேற்று இரவு 9 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில், சீனப் புத்தாண்டை முன்னிட்டு இறக்குமதி செய்யப்பட்டிருந்த 76.8 டன்கள் மெண்டரின் ஆரஞ்சுப் பழங்கள் தீயில் கருகி நாசமாகின.
இத்தீ விபத்து குறித்து அப்பகுதிவாசிகள் தனக்கு தொலைப்பேசியில் அழைத்து தகவல் தெரிவித்ததாக கிடங்கின் மேலாளர் ஹாங் லேங் ஃபெங் தெரிவித்துள்ளார்.
இறக்குமதி செய்து வைக்கப்பட்டிருந்த ஆரஞ்சுப் பழங்கள் அனைத்தும் கோத்தா பாருவைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பேரங்காடிகளுக்கு விநியோகம் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுமார் 40 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த அந்த கிடங்கானது, இத்தீ விபத்தில் முற்றிலும் அழிந்ததோடு, சீனப் புத்தாண்டிற்கான ஆரஞ்சு பழங்கள் விநியோகத்தையும் பெரிதும் பாதித்துள்ளதாகவும் ஹாங் லேங் ஃபெங் தெரிவித்துள்ளார்.








