கோலாலம்பூர், பிப்ரவரி.02-
தங்களது நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் என்ற பெயரில் பொதுமக்களை தொலைப்பேசியில் அழைத்து மோசடி செய்யும் கும்பல் குறித்து தெனாகா நேஷனல் பெர்ஹாட்டான டிஎன்பி எச்சரிக்கை விடுத்துள்ளது.
திரங்கானுவைச் சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர், டிஎன்பி அதிகாரி போல் நாடகமாடி தொலைப்பேசியில் அழைத்த ஒருவரிடம், 50 ஆயிரம் ரிங்கிட்டை இழந்த சம்பவத்தையடுத்து டிஎன்பி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அச்சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள டிஎன்பி, நிறுவனத்தின் தகவல்களை மறு ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.
பொதுமக்கள் யாரும் தங்களது தனிப்பட்ட தகவல்களை முறையான சரிபார்ப்பு இன்றி வெளியிட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.
கடந்த ஜனவரி 29-ஆம் தேதி நடந்த இந்த மோசடி சம்பவத்தின் போது, டிஎன்பி அதிகாரி என தன்னைக் கூறி கொண்ட நபர், பெண் வாடிக்கையாளர் ஒருவரை தொலைப்பேசி மூலமாக மிரட்டி, 50 ஆயிரம் ரிங்கிட் மோசடி செய்துள்ளதை கோலா திரங்கானு மாவட்ட போலீஸ் தலைவர் அஸ்லி முஹமட் நோர் உறுதிப்படுத்தியுள்ளார்.








