நெகிரி செம்பிலான், சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபரில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தானத்தின் மகா கும்பாபிஷேகப் பெருவிழா, வரும் ஜூன் 11-ஆம் தேதி, வியாழக்கிழமை காலை 8.45 மணி முதல் 10.00 மணிக்குள் வெகுசிறப்பாக நடைபெறவுள்ளது.
இவ்வாலயத்தில் அருள்பாலிக்கும் முருகப்பெருமான், அனுஷ்லிங்கம் மற்றும் நவ சக்தி ஆஞ்சநேயர் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு இப்புனித நன்னாளில் குடமுழுக்கு செய்யப்படவுள்ளது.
தமிழகத்தின் புகழ்பெற்ற திருக்கயிலாய பரம்பரை, கந்தப்பரம்பரை திருஞானசம்பந்தர் ஆதீனம் அருட்குருநாதர் தவத்திரு ஸ்ரீமத் சிவாக்கர தேசிக சுவாமிகளின் மேலான ஆலோசனைகளின்படி இந்த மகா கும்பாபிஷேகம் பக்திப் பெருக்குடன் நடைபெறவிருக்கிறது.
தமிழகத்தின் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமையப் பெற்றுள்ள குபேர லிங்கம், ஈசான்ய லிங்கம், இந்திர லிங்கம், அக்னி லிங்கம், யம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம் ஆகிய அஷ்டலிங்கங்களின் வடிவங்களும், மலேசியாவிலேயே முதன்முறையாக ஒன்பது ஆஞ்சநேயர்களை உள்ளடக்கிய நவ சக்தி ஆஞ்சநேயர் சன்னதியும் இவ்வாலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, அவற்றுக்கும் கும்பாபிஷேகம் காணவிருப்பது இத்திருவிழாவின் தனிச்சிறப்பாகும்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மகா கும்பாபிஷேகப் பெருவிழாவில், பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாகக் கலந்துகொண்டு, அண்ணாமலையானின் திருவருளையும் பரிவார மூர்த்திகளின் மகா ஆசிகளையும் பெற்றுய்யுமாறு ஆலய நிர்வாகத்தினர் அன்புடன் கேட்டுக்கொள்கின்றனர்.











