கோலாலம்பூரில் நேற்று மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் தடுப்பு சோதனை நடவடிக்கையின் போது, சந்தேக நபர் ஒருவர் கத்தியால் தாக்கியதில் அதிகாரி ஒருவர் காயமடைந்தார்.
ஜாலான் கெரிஞ்சி பகுதியில் உள்ள ஒரு கார் கழுவும் நிலையத்தில் தேசிய போதைப்பொருள் தடுப்பு முகமையான ஏஏடிகே அச்சோதனையை மேற்கோண்ட போது இச்சம்பவம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் சந்தேக நபரை தடுத்து வைத்து, சிறுநீர் பரிசோதனை செய்யுமாறு கூறியதாகவும், அப்போது அந்நபர் பரிசோதனைக்கு ஒத்துழைக்க மறுத்ததுடன், திடீரென கத்தியால் தாக்கியதாகவும் பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஹூ சாங் ஹூக் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இச்சம்பவத்தில் காயமடைந்த அதிகாரிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், மேலும் விசாரணைகள் தொடர்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








