பெட்டாலிங் ஜெயா, ஜூன் 18-
அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள டீசலுக்கான இலக்குக்கு உரிய உதவித் தொகை திட்டம், ஏற்புடையது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மறு உறுதிப்படுத்தியுள்ளார்.
இலக்குக்குரிய உதவித் தொகையை அறிமுகப்படுத்தியப் பின்னர் சிங்கப்பூர் சுற்றுலாப் பயண நிறுவனங்கள் மற்றும் பயணிகளுக்கான பேருந்து நிறுவனங்கள் போக்குவரத்து பயணக் கட்டணத்தை உயர்த்தியுள்ளன.
திடீரென்று இந்த நிறுவனங்கள் போக்குவரத்து கட்டணத்தை உயர்த்தியுள்ளன என்றால் மலேசிய அரசாங்கத்தின் இந்த உதவித்தொகை திட்டத்தின் சலுகைகளை வெளிநாடுகளில் உள்ள பேருந்து நிறுவனங்களும் பயன்படுத்தி வந்துள்ளன என்பதை காட்டுகிறது என்று டத்தோஸ்ரீ அன்வார் சுட்டிக்காட்டினார்.
அதேபோன்று நாட்டின் எல்லைகளில் டீசலுக்கான உதவித் தொகையை தவறாக பயன்படுத்தி வந்த சில கும்பல்கள் பிடிபட்டது மூலம் இலக்குக்கு உரியவர்களுக்கு மட்டுமே டீசலுக்கான உதவித் தொகை வழங்கப்பட வேண்டும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அத்திட்டத்தை அரசாங்கம் தொடர வேண்டிய அவசியத்தை இச்சம்பவங்கள் உணர்த்துகின்றன என்று பிரதமர் குறிப்பிட்டார்.
அரசாங்கம் இதுநாள் வரையில் அனைவருக்கும் வழங்கி வந்த டீசலுக்கான உதவித் திட்ட சலுகைகள் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளன.
எனவே இந்த உதவித் திட்டம், பொறுப்பற்ற நபர்களால் இனியும் தவறாக பயன்படுத்தப்படாமல் இருப்பதற்கும், நாட்டின் நிதி வளத்தில் கசிவு ஏற்படுவதை தடுத்து, அதனை பாதுகாப்பதற்கும் இலக்குக்கு உரியவர்களுக்கு மட்டுமே டீசலுக்கான உதவித் திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியிருப்பது ஏற்புடைய நடவடிக்கையாகும்.
இது தொடரப்பட வேண்டும் என்று டத்தோஸ்ரீ அன்வார் வலியுறுத்தினார்.








