சிலாங்கூர் சட்டமன்றக் கூட்டத்தில் அனுமதியற்ற ஆலயங்கள் குறித்து தான் வழங்கிய புள்ளிவிவரங்கள், மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் அவர்களின் அறிக்கை மற்றும் அரசு தரவுகளின் அடிப்படையிலானவை என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாபாராய்டு தெளிவுபடுத்தியுள்ளார்.
கடந்த பிப்ரவரி 10, 2026 அன்று சுல்தான் வெளியிட்ட அறிக்கையில், மாநிலத்தில் 687 இந்து ஆலயங்கள் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டிருந்த தரவுகளையே தான் சட்டமன்றத்தில் சமர்ப்பித்ததாக அவர் கூறினார். "பிரதமர் மற்றும் சுல்தான் ஆகிய இருவருமே சட்டப்பூர்வமான வழிபாட்டுத் தலங்களையே வலியுறுத்துகின்றனர். 11.3 விழுக்காடு இந்து மக்கள் தொகை கொண்ட சிலாங்கூர் மாநிலத்தில், இவ்வளவு அதிகமான அனுமதியற்ற ஆலயங்கள் இருப்பது நகர்ப்புறத் திட்டமிடலுக்குச் சவாலானது என்பதைச் சுல்தான் சுட்டிக்காட்டியுள்ளார்" என அவர் நினைவுபடுத்தினார்.
"சட்டமன்றத்தில் நிர்வாகத் தரவுகளைச் சமர்ப்பிப்பது ஒரு மக்கள் பிரதிநிதியின் கடமை. அதைத் தனிப்பட்ட தாக்குதலாகப் பார்ப்பது துரதிர்ஷ்டவசமானது," என்று கூறிய பாபாராய்டு, இந்து சமய அமைப்புகள் தன்னைச் சாடுவதைத் தவிர்த்து, சட்டப்பூர்வமான தீர்வுகளைக் காண மாநில அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
முறையான அனுமதி பெற்று ஆலயங்களை அமைப்பதே நிலையான பாதுகாப்பை உறுதி செய்யும். எனவே, "அனுமதியற்ற ஆலயங்களை முறைப்படுத்தி, அவற்றுக்குச் சட்டப்பூர்வ அங்கீகாரம் பெற்றுத் தரவே மாநில அரசு விரும்புகிறது" என பாபாராய்டு தனது அறிக்கையில் உருக்கமாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.








