காஜாங், ஏப்ரல்.05-
காஜாங் எம்ஆர்டி நிலையத்தின் நுழைவாயில் அருகே பெண் ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் ஆடவர் ஒருவரைப் காவற்படையினர் நேற்று சனிக்கிழமை கைது செய்தனர். சமூக வலைத்தளத்தில் தீவிரமாகப் பகிரப்பட்ட 23 வினாடி காணொளியைத் தொடர்ந்து விசாரணை நடத்திய காவற்படையினர், கடந்த வியாழக்கிழமை மாலை 6:15 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பாகச் சந்தேக நபரைப் பிடித்துள்ளதாக காஜாங் மாவட்ட காவற்படைத் தலைவர் உதவி ஆணையர் நாஸ்ரோன் அப்துல் யுசோஃப் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டப் பெண் படிக்கட்டு அருகே காத்திருந்த போது, அங்கு வந்த அந்த ஆடவர் அனுமதியின்றி அவரது உடலைத் தொட்டு விட்டுத் தப்பியோடியதாகக் கூறப்படும் நிலையில், மேலதிக விசாரணைக்காகச் சந்தேக நபர் நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்படவுள்ளார்.








