புத்ராஜெயா,செப்டம்பர் 30-
பயங்கரவாத மற்றும் தீவிரவாத நடவடிக்கைகள் பரவுவதை தடுக்கவும் , சமாளிக்கவும் தேசிய பாதுகாப்பு சட்டம் போன்ற பிரத்தியேக பாதுகாப்பு சட்டங்களை உருவாக்க வேண்டிய அவசியம் மலேசியாவிற்கு ஏற்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
வெளியிலிருந்து வரக்கூடிய பயங்கரவாத மற்றும் தீவிரவாத கூறுகள் மற்றும் தாக்கங்களிலிருந்து நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்தில் வலுவான தேசிய பாதுகாப்பு சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டிய தேவைகள் இருப்பதாக பிரதமர் விளக்கினார்.
எனினும் இது போன்ற சட்டத்தை உருவாக்குவதற்கான அவசியத்தையும், தேவையையும் போலீஸ் படை, இராணுவம் மற்றும் இதர அமலாக்கத் தரப்பினரிடமே தாம் விட்டு விடுவதாக பிரதமர் குறிப்பிட்டார்.
நாட்டின் நடப்பு தேசிய பாதுகாப்பு சட்டத்தில், புதியதாக சில அம்சங்கள் சேர்க்கப்படும் போது அவற்றை சில தரப்பினர் எதிர்க்கக்கூடும். ஆனால், அந்த அம்சங்கள் தற்காக்கப்படுவதற்கு அரசாங்கம் போராடும் என்று பிரதமர் விளக்கினார்.
மலேசியா / ஜனநாயகத்தின் அடையாளமாக ஒரு முதிர்ச்சிப்பெற்ற நாடாக உருவாக வேண்டும் என்று விரும்புகிறோம். அந்த உருவாக்கத்தில் பயங்கரவாத மற்றும் தீவிரவாத சக்திகளுக்கு இடமில்லை. அத்தகைய களம் உருவாக்கப்படுவதை நம்மால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று பிரதமர் தெளிவுபடுத்தினார்.
பயங்கரவாத மற்றும் தீவிரவாத சிந்ததந்தத்தை தடுப்பதற்கும், அவற்றை கையாளுவதற்கும் மலேசியாவில் இன்று புத்ராஜெயாவில் ஒரு செயல்திட்டத்தை வெளியீடு செய்து, உரையாற்றிய போது பிரதமர் இதனை தெரிவித்தார்.
பயங்கரவாத கூறுகள் நாட்டிற்குள் நுழைந்தால் நாட்டில் இனங்களுக்கு இடையில் பிளவுகளையும் பேதங்களையும் ஏற்படுத்தி விடும் என்று பிரதமர் அச்சம் தெரிவித்தார்.
பயங்கரவாத கூறுகளை துடைத்தொழிப்பதில் அரசாங்கத்திற்கு அரசியல் நோக்கங்கள் எதுவும் இல்லை. ஆனால், நாட்டின் பாதுகாப்பில் அச்சுறுத்தல் ஏற்படுவதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என்று அவர் விளக்கினார்.








