கெப்போங் பகுதியில் நடந்த தொடர் ஆயுத கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூத்த போலீஸ் அதிகாரி, முன்னதாக புக்கிட் அமானில் பணியாற்றியவர் என்பதை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அக்குற்றச்சாட்டுக்குள்ளான துணை போலீஸ் கண்காணிப்பாளர், கடந்த ஜனவரி 23-ஆம் தேதி இடைநீக்கம் செய்யப்படும் வரை, புக்கிட் அமான் வணிக குற்ற விசாரணைப் பிரிவில் பணியாற்றி வந்துள்ளதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் பாடில் மார்சூஸ்தெரிவித்துள்ளார்.
குற்றக் குழுவின் செயல்பாடுகளை திட்டமிடுவதிலும், அவர்களின் நகர்வுகளை ஒருங்கிணைப்பதிலும் அந்த அதிகாரி முக்கியப் பங்காற்றியிருக்கலாம் என நம்பப்படுகின்றது.
சம்பந்தப்பட்ட அதிகாரி உட்பட மொத்தம் ஆறு பேர் கெப்போங் பகுதியில் வெளிநாட்டினர் வாழும் குடியிருப்புகளை குறிவைத்து நடந்த பல கொள்ளை சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என்றும் பாடில் மார்சூஸ் தெரிவித்துள்ளார்.
31 முதல் 51 வயதுக்குட்பட்ட அந்தக் குழு, போலீஸ் அதிகாரிகள் போல் நாடகமாடி, வீடுகளில் நுழைந்ததாகவும், அவர்களில் துப்பாக்கி போன்ற பொருள் ஒன்றை வைத்திருந்த நபர், பாதிக்கப்பட்டவர்களை மிரட்டியதாகவும் கூறப்படுகின்றது.
மேலும்,விசாரணையில், டொயோட்டா அல்ஃபார்ட், ரோல்ஸ் ராய்ஸ், பென்ட்லீ போன்ற உயர்தர வாகனங்கள், ஒரு பாதுகாப்புப் பெட்டி, 24 ஆயிரத்து 200 ரிங்கிட் ரொக்கம், 1,200 அமெரிக்க டாலர்கள், நகைகள் மற்றும் இரண்டு தங்க கட்டிகள் ஆகியவற்றை கொள்ளையடித்ததும் தெரியவந்துள்ளது.
அதன் மொத்த இழப்பானது 4.4 மில்லியனை கடந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அதேவேளையில், இந்த கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட பாதுகாவலர்கள் தங்களுக்குச் சட்டப்படி வழங்கப்பட்ட துப்பாக்கிகளை பயன்படுத்தியிருந்ததும் போலீசார் கண்டறிந்துள்ளனர்.








