கோலாலம்பூர், டிசம்பர்.02-
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம்மின் தலைவராக டான் ஶ்ரீ அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா? என்பது அவரின் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டே தீர்மானிக்கப்படும் என சட்ட சீர்திருத்தங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அஸாலினா ஒத்மான் தெரிவித்துள்ளார்.
பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் எஸ்பிஆர்எம்மின் தலைவராக நான்காவது முறையாக அவரது பதவிக் காலம் தொடர்ந்து நீட்டிக்கப்படுமா? என அமைச்சரவையில் இன்று பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ ரஃபிஸி ரம்லி எழுப்பிய கேள்விக்கு அஸாலினா ஒத்மான் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.
மேலும், கடந்த மே மாதம் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்ட போது, பிரதமரின் சொந்த கட்சியான பிகேஆரின் துணைத் தலைவரான நூருல் இஸா அன்வார் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்ததை ரஃபிஸி சுட்டிக் காட்டினார்.
இந்நிலையில், நாடாளுமன்ற நடைமுறை விதி 23(1)(h) -ன் படி, எதிர்காலத்தில் நடக்கலாம் என ஊகிக்கப்படும் விஷயங்கள், பிரச்சினையாகக் கருதப்படாத விஷயங்கள் குறித்து கேட்கப்படும் கேள்விகளுக்கு தெளிவாகப் பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று அஸாலினா ஒத்மான் தெரிவித்தார்.
இது போன்ற விவகாரங்களில், ஒப்பந்தத்தை நீட்டிப்பது குறித்து எடுக்கப்படும் எந்த முடிவும், சம்பந்தப்பட்ட நபரின் செயல்திறன் மதிப்பீடு, அவர் சார்ந்த அமைப்பின் தேவைகள், மற்றும் அந்நேரத்தில் பொருத்தமாகக் கருதப்படும் காரணங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் என்றும் அஸாலினா ஒத்மான் தனது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2020-ஆம் ஆண்டு, எஸ்பிஆர்எம் தலைவராக நியமிக்கப்பட்ட அஸாம் பாக்கியின் பதவிக் காலம் கடந்த மே மாதம் மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.








