சிரம்பான், ஜூலை.01-
அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ள நிறுவனங்கள், தங்கள் தொழிலாளர்களுக்கு முறையான அடிப்படை வசதிகளைச் செய்யத் தவறியிருப்பது தொடர்பில் அத்தகைய நிர்வாகங்களுக்கு எதிராக நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீரப்பன் சுப்பிரமணியம் தலைமையில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த ஜுன் 26 ஆம் தேதி மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை நெகிரி செம்பிலான் முகிம் ரந்தாவிற்கு உட்பட்ட ஒரு கட்டுமானத் தளத்தில் வீரப்பன் தலைமையில் ஓப்ஸ் மம்பாவ் எனும் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

போலீஸ் படை, குடிநுழைவுத்துறை, சொக்சோ, வேலையிடச் சுகாதாரப் பாதுகாப்பு இலாகா, சுகாதார இலாகா, ஆள்பல இலாகா என நெகிரி செம்பிலான் மாநிலத்தில் பல்வேறு அரசாங்க ஏஜென்சிகளின் 46 அமலாக்க அதிகாரிகள் கொண்ட குழுவிற்குத் தலைமையேற்று வீரப்பன் இந்தச் சோதனையை மேற்கொண்டார்.

ஓஎஸ்கே கன்ஸ்ரக்ஷன் நிறுவனத்தின் 171 அந்நியத் தொழிலாளர்களுக்கு முறையான குடியிருப்புகளை ஏற்படுத்தித் தராதது, சுகாதாரமற்ற சூழலில் அவர்களின் தங்கும் இடம் மற்றும் ஆண்களும் பெண்களும் ஒரே இடத்தில் தங்குவதற்கான நிலை இருந்தது முதலியவற்றைத் தாங்கள் கண்டறிந்ததாக வீரப்பன் தெரிவித்தார்.

இதன் தொடர்பில் மூன்று வார காலக் கட்டத்திற்குள் அந்த நிறுவனம் தொழிலார்களுக்கான குடியிருப்புத் தரத்தை மேம்படுத்திக் கொள்வதற்கு நெகிரி செம்பிலான், ஆள்பல இலாகா பல்வேறு நிபந்தனைகளை விதித்திருப்பதாக வீரப்பன் குறிப்பிட்டார்.








