ஷா ஆலாம், ஜூலை.05-
ஷா ஆலாம் பகுதியில் உள்ள தொழிற்கல்வி கல்லூரியில் 15 வயதுடைய இரண்டு மாணவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறப்படும் வழக்கில், சந்தேக நபரைப் பணியில் அமர்த்துவதற்கு முன் அவரது குற்றப் பின்னணியைக் கல்லூரி நிர்வாகம் சரிபார்க்கவில்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Glenmarie பகுதியில் உள்ள அந்த கல்லூரியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வந்த சந்தேக நபருக்கு பாலியல் குற்றப் பதிவு இருந்தது குறித்து நிர்வாகத்துக்கு தெரியவில்லை என்றும், இது தொடர்பாக கல்லூரி நிர்வாகத்தின் வாக்குமூலமும் பதிவு செய்யப்படவுள்ளதாக ஷா ஆலம் மாவட்ட போலீஸ் தலைவர் சருடின் சாமா தெரிவித்துள்ளார்.
இதுவரை சந்தேகந பரின் தந்தை உள்ளிட்ட இருவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ள நிலையில், மேலும் பலரிடம் விசாரணை நடைபெற்று வருகின்றது.
டிஜிட்டல் ஆதாரங்கள், மருத்துவ அறிக்கைகள் மற்றும் சாட்சியங்கள் சேகரிக்கப்பட்ட பிறகு விசாரணை அறிக்கை சட்டத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் என்றும் சருடின் சாமா குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜூலை 3-ஆம் தேதி, கல்லூரி ஊழியர் ஒருவர் தங்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக இரண்டு மாணவர்கள் புகார் அளித்ததையடுத்து, சந்தேக நபர் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டு, தற்போது விசாரணை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.








