கோலாலம்பூர், ஜனவரி.08-
யாயாசான் அகல்புடி (Yayasan Akalbudi) அறவாரியம் நிதி தொடர்பாக 47 ஊழல் குற்றச்சாட்டுகளில், துணைப்பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடிக்கு எதிராக இனி "மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் இல்லை" என்று AGC எனப்படும் சட்டத்துறை அலுவலகம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த 2023-ஆம் ஆண்டு செப்டம்பரில் இந்த 47 குற்றச்சாட்டுகளில் இருந்து ஸாஹிட் ஹமிடிக்கு "விடுதலை அளிக்காமல் DNAA எனும் விடுவிப்பு" வழங்கப்பட்டது. தற்போது எடுக்கப்பட்டுள்ள முடிவின் மூலம் இந்த விவகாரம் முழுமையாக முடிவுக்கு வருகிறது. துணைப்பிரதமர் மீது இனி எந்த மேல் நடவடிக்கையும் இல்லை என்று சட்டத்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் நடத்திய விரிவான கூடுதல் விசாரணைகளுக்குப் பிறகு, குற்றச்சாட்டுகளைத் தொடர போதுமான ஆதாரங்கள் இல்லை என்று AGC முடிவு செய்துள்ளது.
நிதியின் ஆதாரம், அவை பெறப்பட்ட விதம் மற்றும் பயன்படுத்தப்பட்ட முறை ஆகியவை குறித்து ஆழமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாக AGC அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் மற்றும் சட்ட விதிகளின் கீழ் அரசுத் தலைமை வழக்கறிஞருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில், நீதியின் நலன் மற்றும் வெளிப்படைத்தன்மையைக் கருத்தில் கொண்டு இந்த இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.








