நோன்புப் பெருநாள் விடுமுறையை முன்னிட்டு கிளாந்தான் திரும்பும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், மேராப்போ மற்றும் கம்போங் மெந்தாரா எல்லைப் பகுதியில் இன்று மாலை நிலவரப்படி சுமார் 20 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
கோலாலம்பூர் மற்றும் காஜாங் போன்ற பகுதிகளில் இருந்து கிளாந்தான் நோக்கி வருபவர்கள், குவா முசாங்கை வந்தடையவே சுமார் 12 மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
வாகனங்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள்ளது ஒருபுறமிருக்க, குவா முசாங் - கோலா லிப்பிஸ் சாலையில் ஆங்காங்கே சில வாகனங்கள் பழுதாகி நின்றதும் இந்த நீண்ட நெரிசலுக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.
சுமார் 20 லட்சம் வாகனங்கள் இந்த முறை கிளாந்தானுக்குள் நுழையும் என எதிர்பார்க்கப்படுவதால், குவா முசாங் மாவட்டப் போலீசார் போக்குவரத்தைச் சீர்செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக ரந்தாவ் மானிஸ் மற்றும் குவா முசாங் - கோலா கிராய் பகுதிகளில் நெரிசல் மேலும் அதிகரிக்கக்கூடும் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.








