மதுபோதையில் வாகனமோட்டி மரணத்தை ஏற்படுத்துபவர்களுக்கு, சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987-ன் கீழ் மரண தண்டனையை அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.
இன்று திங்கட்கிழமை நடைபெற்ற சாலைப் பாதுகாப்புத் திட்ட நிகழ்வில் கலந்துகொண்ட அந்தோணி லோக் இதனை வலியுறுத்தினார்.
கடுமையான குற்றங்களுக்குத் தண்டனை வழங்கத் தற்போதைய சட்டங்களே போதுமானவை. தேவைப்பட்டால், குற்றவாளிகள் மீது நடப்பு குற்றவியல் சட்டமமான 302- ஆவது பிரிவின் நடவடிக்கை எடுக்க முடியும் என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார்.
அரசாங்கம் ஏற்கனவே கட்டாய மரண தண்டனையை ரத்து செய்துள்ளதால், புதிய மரண தண்டனைகளைக் கொண்டுவரும் எண்ணம் தற்சமயம் இல்லை என்பதையும் ஜசெக பொதுச் செயலாளருமான அந்தோணிக் லோக் சுட்டிக்காட்டினார்.
நடப்பு சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குக் குற்றவாளிகளிடமிருந்து கட்டாய இழப்பீடு பெற்றுத் தருவதே அரசின் தற்போதைய நோக்கம் என்பதையும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.
• சிறைத்தண்டனை மற்றும் அபராதத்துடன் சேர்த்து, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குக் குற்றவாளிகள் நிதி ரீதியான இழப்பீடு வழங்குவதை உறுதி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது என்பதையும் அவர் விளக்கினார்.








