ஷா ஆலாம், பிப்ரவரி.13-
பண்டார் உத்தாமா பள்ளி மாணவி கொலை வழக்கில், கொலைக் குற்றம் சாட்டப்பட்ட 15 வயது மாணவர், தான் அக்குற்றத்தை புரியவில்லை என நேற்று வியாழக்கிழமை ஷா ஆலம் உயர்நீதிமன்றத்தில் வாதிட்டு, விசாரணை கோரியுள்ளார்.
நீதிபதி அட்லின் அப்துல் மாஜிட் முன்னிலையில் அவருக்கு எதிரான குற்றச்சாட்டானது மாண்டரின் மொழியில் வாசிக்கப்பட்டது.
இந்த வழக்கானது சிறார் சம்பந்தப்பட்டது என்பதால் விசாரணைகள் மூடிய கதவுகளுக்குப் பின்னால் நடைபெற்றன.
அம்மாணவரின் குடும்பத்தினர் மட்டுமே நீதிமன்ற அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
கடந்த 2025-ஆம் ஆண்டு, அக்டோபர் 14-ஆம் தேதி, காலை 9.20 மணி முதல் 9.35 மணியளவில், பண்டார் உத்தாமாவில் உள்ள ஒரு தேசிய மேல்நிலைப் பள்ளியில் உள்ள பெண்கள் கழிப்பறையில், மூன்றாம் படிவ மாணவியை அம்மாணவர் கொலை செய்ததாக அக்குற்றச்சாட்டில் கூறப்பட்டிருந்தது.
குற்றவியல் சட்டம், பிரிவு 302-இன் கீழ், குற்றம் நிரூபிக்கப்பட்டால், 30 முதல் 40 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையோ அல்லது மரண தண்டனையோ விதிக்க அச்சட்டம் வழிவகை செய்கின்றது.
இந்த வழக்கு விசாரணையை துணை அரசு வழக்கறிஞர்களான Aqharie Durranie Aziz மற்றும் Zamariah Zarifah Aris ஆகியோர் வழிநடத்துகின்றனர்.
இதற்கிடையில், நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அம்மாணவரின் வழக்கறிஞர் கிட்சன் ஃபூங், தனது கட்சிக்காரர் குற்றச்சாட்டைப் புரிந்து கொண்டு வழக்கை விசாரிக்க விரும்புகிறார் என்றும், எனவே நீதிமன்றம் அடுத்த வழக்கு விசாரணையை மார்ச் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.








