தாய்லாந்து அரசியாரிடமிருந்து 'சமூக மேம்பாட்டுக்கான சிறந்த பெண்மணி' விருதைப் பெற்றுள்ள பேராசிரியர் Tan Sri Datuk Seri Dr Sharifah Hapsah Syed Hasan Shahabudin-விற்குப் பிரதமர் Datuk Seri Anwar Ibrahim மற்றும் அவரது துணைவியார் Datuk Seri Dr Wan Azizah Wan Ismail ஆகியோர் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
இந்த உயரிய விருது மலேசியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளதோடு, அனைத்துலக அரங்கில் மலேசியப் பெண்களின் ஆற்றலையும் முக்கிய பங்களிப்பையும் இது பிரதிபலிக்கிறது என பிரதமர் கூறினார். இந்த அங்கீகாரம் மலேசிய மடானி கொள்கையை முன்னெடுத்துச் செல்ல மேலும் பல பெண்களுக்கு உத்வேகமாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு துறைகளில் பெண்களின் பங்கேற்பை விரிவுபடுத்தவும், நாட்டின் வளர்ச்சிக்கான முக்கிய தூணாக அவர்களின் திறமைகளைத் தக்க வைக்கவும் மடானி அரசாங்கம் தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
Dr Sharifah Hapsah கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக மேம்பாட்டுத் துறைகளில் மிக முக்கியப் பங்காற்றியுள்ளார். குறிப்பாக, மலேசியத் தேசியப் பல்கலைக்கழகமான UKM- மின் முதல் பெண் துணைவேந்தராகப் பொறுப்பு வகித்ததோடு, தேசிய மகளிர் அமைப்புகளின் மன்றத் தலைவராகப் பெண்களின் உரிமைகள் மற்றும் அவர்களின் முன்னேற்றத்திற்காகத் தொடர்ச்சியாகப் போராடி சாதனைப் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.








