குவாந்தான், ஜனவரி.25-
நிரந்தர வசிப்பிட உரிமையான PR மற்றும் குடியுரிமை வழங்குவது தொடர்பான விவகாரங்களில் மேன்மை தங்கிய பகாங் சுல்தான், சுல்தான் அப்துல்லா இன்று தமது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தினார்.
குடியுரிமை மற்றும் PR அந்தஸ்து வழங்குவது என்பது வெறும் நிர்வாக ரீதியான விஷயம் மட்டுமல்ல, அது ஒரு இறையாண்மை கொண்ட தேசத்தின் நம்பிக்கை, நேர்மை, நீதி மற்றும் கண்ணியத்துடன் தொடர்புடையது. இந்தச் சலுகைகளை வழங்குவதை மிகச் சாதாரணமாகவோ அல்லது கவனக் குறைவாகவோ கையாளக்கூடாது என்று சுல்தான் வலியுறுத்தினார்.
இன்று குவந்தானில் நடைபெற்ற '2026 அரச இளைஞர் சொற்பொழிவு' நிகழ்ச்சியில் உரையாற்றிய சுல்தான் இதனைத் தெரிவித்தார்.
குடியுரிமை என்பது வெறும் காகிதமோ அல்லது சட்டபூர்வ அங்கீகாரமோ மட்டுமல்ல, அது நாட்டின் மீதும் மன்னர் மீதும் கொள்ளும் விசுவாசப் பிரமாணம். அது விலைக்கு வாங்கக்கூடிய வெகுமதியோ, அதிகாரத்தால் வழங்கப்படும் பரிசோ அல்லது தேசத்திற்குள் நுழைவதற்கான எளிய நுழைவுச் சீட்டோ அல்ல. அது ஒரு நாட்டின் மீது ஒருவர் வைக்கும் உயர்ந்த நம்பிக்கையின் அடையாளம்."
இந்த விவகாரத்தில் பொறுப்பு வகிப்பவர்களுக்கு தாம் நினைவூட்ட விரும்புவது என்னவென்றால், இதில் காட்டும் கண்டிப்பு என்பது அநீதி அல்ல; அது நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கும் அரண். முறையான பரிசீலனை மற்றும் நேர்மை இன்றி குடியுரிமைக்கான கதவுகள் திறக்கப்பட்டால், மக்கள் நாட்டின் மீது வைத்திருக்கும் நம்பிக்கை சிதைந்து விடும். உலக அரங்கில் நாட்டின் கண்ணியம் குறைந்துவிடும் என்று சுல்தான் நினைவுறுத்தினார்.








