ஜோகூர் பாரு, ஜனவரி.17-
பரபரப்பான சாலையைச் சிறுவன் ஒருவன் ஆபத்தான முறையில் கடந்து சென்றது தொடர்பான விசாரணைக்கு உதவுமாறு, இது குறித்த தகவல் அறிந்த பொதுமக்களைப் போலீஸ் துறை கேட்டுக் கொண்டுள்ளது.
ஜோகூர் பாரு செலத்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரவூப் செலாமாட் கூறுகையில், இந்தச் சம்பவம் கடந்த ஜனவரி 14 ஆம் தேதி காலை சுமார் 6.18 மணியளவில் ஜாலான் துன் ராஸாக் சூசூர் 5 –லிருந்து ஜாலான் டத்தின் ஹலிமா நோக்கிச் செல்லும் சாலையில் நடந்ததாக நம்பப்படுகிறது.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வாகனத்தின் dashcam காட்சிகளின் அடிப்படையில் இந்தத் தகவல் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதுவரை இச்சம்பவம் குறித்து எந்தப் புகாரும் எங்களுக்கு வரவில்லை. அந்தச் சிறுவனைப் பற்றித் தெரிந்தவர்கள் அல்லது தகவல் அறிந்தவர்கள், விசாரணைக்கு உதவும் வகையில் அருகிலுள்ள போலீஸ் நிலையத்திற்கு வருமாறு அல்லது போலீசாருடன் தொடர்பு கொள்ளுமாறு அவர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.
சாலையை ஆபத்தான முறையில் கடப்பது கடுமையான விபத்துகளுக்கு வழிவகுக்கும் என்றும், இது அந்தச் சிறுவனின் உயிருக்கு மட்டுமல்லாமல் மற்ற சாலைப் பயனாளர்களுக்கும் ஆபத்தானது என்றும் அவர் வலியுறுத்தினார்.








