கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, ஆடவரை மிரட்டி, 300 ரிங்கிட் பணம் பறித்த வழக்கில், குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட 36 வயதான முன்னாள் போலீஸ் அதிகாரி ஒருவர், இன்று முதல் தனக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவிக்கவுள்ளார்.
தனக்கு நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணுடனான அந்தரங்கக் காணொளியைப் போனில் பதிவு செய்திருந்த ஆடவர் ஒருவரை, அமான் முஸ்தபா என்ற அந்த போலீஸ் அதிகாரி, அக்காணொளியை வெளியிடுவதாக மிரட்டி, பணம் பறித்ததாக, நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
தனிப்பட்ட லாபத்திற்காக பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அரசு ஊழியர் ஒருவர், தனது பதவி மற்றும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக அப்பீல் நீதிமன்ற நீதிபதி நூரின் பதாருதீன் தெரிவித்துள்ளார்.
மேலும், இது போன்ற நடத்தையானது அரசாங்க நிறுவனங்கள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை சீர்குலைப்பதாகக் கூறிய நீதிபதி, தண்டனைக்கு எதிராக அமான் முஸ்தபா தாக்கல் செய்திருந்த இறுதி அப்பீல் மனுவைத் தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கினார்.








