Mar 20, 2026
Thisaigal NewsYouTube
நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி
தற்போதைய செய்திகள்

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

Share:

நோன்புப் பெருநாள் என்பது குடும்பம், அன்பு, ஒருமைப்பாடு போன்ற வாழ்வின் அர்த்தமுள்ள விழுமியங்களை நோக்கி நாம் மீண்டும் பயணிக்கும் ஓர் உன்னதமான தருணமாகும் என மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான அவர், நகரங்களில் தேசத்தின் பொருளாதாரத்திற்காக உழைக்கும் தொழிலாளர்கள், குறிப்பாக குடும்பத்தை காக்க நேரமின்றி உழைக்கும் 'கிக்' பணியாளர்களின் அர்ப்பணிப்பை நினைவுகூர்ந்தார்.

ஷவ்வால் மாதத்தை முன்னிட்டு சொந்த ஊர் திரும்பும் இவர்களின் பயணம், வெறும் விடுமுறை அல்ல; அது நீண்ட நாள் ஏக்கத்தையும் பாசத்தையும் சுமந்து செல்லும் ஒரு புனிதப் பயணம் என்றார் அவர்.

"பெற்றோரின் எதிர்பார்ப்பு, குடும்பத்தாரின் அரவணைப்பு, பாசத்துடன் சமைக்கப்பட்ட உணவு ஆகியவற்றிற்காக காத்திருக்கும் அந்த தருணம் ஈடுஇணையற்றது. கதவு திறக்கப்படும்போது அன்புக்குரியவர்களின் முகத்தைப் பார்த்த மாத்திரத்திலேயே, ஆண்டு முழுவதும் பட்ட களைப்பு அனைத்தும் மறைந்துவிடும்," என அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

மலேசியாவின் தனித்துவமான 'திறந்த இல்ல' கலாச்சாரம், இனம், மதம், பின்னணி என அனைத்து எல்லைகளையும் கடந்து நம்மை ஒரே மேசையில் அமர வைக்கிறது. இந்தச் சந்திப்புகள் சகிப்புத்தன்மையையும், பரஸ்பர மரியாதையையும் மேம்படுத்தி, மலேசியா மதானி எனும் ஒரு பெரிய குடும்பமாக நம்மை பலப்படுத்துகிறது.

"வேற்றுமைகளைத் தாண்டி அன்பு மற்றும் ஒற்றுமை எனும் பாலத்தால் நாம் இணைந்திருக்கிறோம். இதுவே நம் நாட்டின் பலம்," என்று கூறிய பிகேஆர் கட்சியின் தேசிய உதவுத் தகைவருமான டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், மக்கள் அனைவரும் பாதுகாப்பாக பயணம் செய்து, மகிழ்ச்சியுடன் பண்டிகையைக் கொண்டாட வாழ்த்தினார்.

Related News

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர... | Thisaigal News