அமைச்சரவை சீரமைப்பில் மனித வள அமைச்சர் பதவியிலிருந்து தம்மை நீக்கியிருக்கும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் முடிவை மதிப்பதாக வி. சிவகுமார் தெரிவித்துள்ளார்.
பிரதமர் இன்று அறிவித்த அமைச்சரவை மாற்றத்தில் சிவகுமாரை தவிர மற்ற அமைச்சர்கள் அனைவரும் தங்கள் பொறுப்புகளில் நிலைநிறுத்திக்கொண்டது அல்லது வெவ்வேறு அமைச்சுகளுக்கு மாற்றப்பட்ட போதிலும் யாரும் நீக்கப்படவில்லை. சிவகுமார் மட்டுமே மனித வள அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அந்நியத் தொழிலாளர்கள் தருவிப்பு தொடர்பாக சிவகுமார், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் மினால் விசாரிக்கப்பட்டது, அவரின் மூன்று முக்கிய உதவியாளர்கள் விசாரணைக்கு ஏதுவாக கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் சிவகுமார் தனது அமைச்சர் பதவியை இழந்ததற்கு முக்கிய காரணமாக இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
சிவகுமாரின் மனித வள அமைச்சர் பொறுப்பு, முன்னாள் இரண்டாவது துணை நிதி அமைச்சரான டிஏபியை சேர்ந்த புக்கிட் மெர்தாஜம் எம்.பி. 41 வயதான ஸ்தீவன் சிம் மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.








