ஜோகூர்,ஜூலை 27-
ஜோகூர், Pontian, Pekan Nanas போலீஸ் நிலையத்தை கும்பல் ஒன்று தாக்கியதைப் போல காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
13 விநாடிகள் ஓடிக்கூடிய அந்த காணொளியில் மரக்கட்டை, இரும்புத் தடிகளை ஏந்திக்கொண்டு ஆடவர்கள், சிலர் அந்த போலீஸ் நிலையத்திற்குள் நுழைந்து போலீஸ் நிலையத்தை தாக்குவதைப் போல சித்தரிக்கிறது.
இது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்த வரும் வேளையில் அது ஓர் அதிரடி நடவடிக்கைக்கான முன்மாதிரியான பயிற்சி என்று ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் கமிஷனர் M. குமார் விளக்கம் அளித்தார்.
போலீஸ் நிலையம் தாக்கப்படும் சம்பவம் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு அப்படியொரு சாத்தியம் ஏற்படுமானால் போலீசார் மேற்கொள்ள வேண்டிய தற்காப்பு நடவடிக்கைக்கு மாதிரி செயல்முறை விளக்க காட்சியாக அது அமைந்துள்ளது என்று கமிஷனர் குமார் தெளிவுபடுத்தினார்.
இது ஜோகூர் போலீஸ் தலைமையகத்தின் கீழ் உள்ள அனைத்து மாவட்ட போலீஸ் தலைமையகங்களிலும் கடந்த ஜுலை 2 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை நடைபெற்று வருகின்ற பயிற்சியாகும் என்று அவர் விளக்கம் அளித்தார்.








