மலாக்கா, நவ.6-
மலாக்கா, அலோர் காஜா, ஜாலான் சிம்பாங் அம்பாட், பழைய நானிங் திருக்கோவிலான ஸ்ரீ பால தண்டாயுதபாணி ஆலயத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் கந்த சஷ்டி விரத விழா, இன்று புதன்கிழமை சிறப்பு பூஜைகளுடன் வெகுவிமரிசையாக நடைபெற்றது. பக்தர்கள் பெரும் திளராக கலந்து கொண்டனர்.
கடந்த நவம்பர் 2 ஆம் தேதி சனிக்கிழமை தொடங்கி, நாளை நவம்பர் 7 ஆம் தேதி வியாழக்கிழமை வரை பூஜைகள் நடைபெற்று வரும் வேளையில் இன்றைய நிகழ்வும் முத்தாப்பாக அமைந்தது.

பூர்வாங்க விக்னேஸ்வர பூஜை, மகா அபிஷேகம், ஸ்ரீ சத்ரு சம்ஹார திரிசதி ஹோமம், கட அபிஷேகம், ஆலய நித்திய பூஜை, வசந்த மண்டப பூஜை, கந்த சஷ்டி பாராயணம், தீபாரதனை, விபூதி பிரசாதம், சிற்றுண்டி வழங்குதல் முதலிய நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.
பூஜைகள் யாவும் ஆலய பிரதம குரு, ஜோதிடர், ஆஞ்சநேய உபாசகர் சிவஸ்ரீ கு. நவதாஸ சர்மா குருக்கள் தலைமையில் நடைபெற்றது. இவ்வைபத்தில் பக்தமெய்யன்பர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விழாவின் நிறைவு நாளான நாளை நவம்பர் 7 ஆம் தேதி வியாழக்கிழமை மாலை மணி 4.30 க்கு மகா அபிஷேகம் நடைபெறும். அதனைத் தொடர்ந்து நித்திய பூஜை, வசந்த மண்டப பூஜை, சூர சங்கார உற்சவம் நிறைவேற்று பிராச்சித்த அபிஷேகம் மற்றும் இரவு 8.00 மணிக்கு கந்த சஷ்டி பாராயணம், தீபாராதனை, விபூதி பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்படும்.

இச்சிறப்பு நிகழ்வில் மெய்யன்பர்கள் வருகை தந்து, பங்கு கொண்டு எம்பெருமானின் திருவருளை பெற்றுய்யுமாறு ஆலய நிர்வாகத்தினர் கேட்டுக்கொள்கின்றனர்.








